தீபாவளித் திருநாளில்
சிவனே! உன்பாதம் போற்றி
வையக மாந்தர்க் காக
வரம்பல கேட்பேன் அப்பா!
எனக்காக ஏதும் வேண்டா
எனக்குநீ தந்தி ருக்கும்
வளமான வாழ்வே போதும்
வணங்கிஉய் வேன்எப் போதும்!
சண்டைசச் சரவு இன்றித்
தாரணி தழைக்க வேண்டும்!
நீள்புவி மாந்தர்க் கெல்லாம்
நிம்மதி நெஞ்சில் வேண்டும்!
குவலயம் தன்னை வாட்டும்
கொலை கொள்ளை கற்பழிப்பு
தீவிர வாதம் மற்றும்
தீண்டாமை ஒழிய வேண்டும்!
மனித நேயத்தி னாலே
மானுடம் செழிக்க வேண்டும்!
புண்ணியா! இவற்றை யன்றிப்
புவிக்குவே றென்ன வேண்டும்!
அருட்பெருஞ் ஜோதி யான
ஐயனே! கேட்ட தெல்லாம்
அன்புடன் வையம் வாழ
ஆண்டவா! அருள் செய்வாயே!